Pugaivandi

புகைவண்டி தூரத்தில் வரக்கண்டேன்

நிலையத்தில் நின்றதும் ஏறிக்கொண்டேன்

ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டேன்

சந்தோஷம் நெஞ்சில் நிறையக் கண்டேன்.

அசையும் பச்சைக்கொடி பார்த்தேன்

அனைத்தும் மெல்ல நகரக் கண்டேன்.

முன்னால் ரயிலும் விரையக் கண்டேன்

பின்னால் மரங்கள் மறையக் கண்டேன்.

வழியில் பச்சை வயல் பார்த்தேன்

வெள்ளைக் கொக்குகள் பல பார்த்தேன்

சோளக்கொல்லை பொம்மைகளும்

ஜோராய் நிற்கும் அழகு பார்த்தேன்

கோணல் பனைமர வரிசை கண்டேன்

குரங்குகள் தாவும் சோலை கண்டேன்

குறுக்கிடும் பாதையில் காத்திருக்கும்

கார் பஸ் வரிசையும் நான் பார்த்தேன்.

டாட்டா காட்டி ஓடிவரும்

குழந்தைகளுக்குக் கை அசைத்தேன்.

அடடா அடடா என்பது போல்

ஆற்றைக்கடக்கும் ஒலி ரசித்தேன்.

ரயிலுக்குள் பலவும் விற்கக் கண்டேன்

ரசனையாய்ப் பாடும் பாடல் கேட்டேன்.

பலப்பல நிலையம் கடக்கக் கண்டேன்

பலகைப் பெயர்களைப் படித்து வந்தேன்

அம்மாச்சி ஊரும் வரக்கண்டேன்

மகிழ்ச்சியில் மனமும் ஆடக்கண்டேன்

குஷியுடனே குதித்திறங்கிக் கொண்டேன்

விசிலூதிய ரயிலுக்கு விடைகொடுத்தேன்…


ஆசிரியர் பற்றி

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கீதா மதிவாணன் கதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு எனத் தொடர்ந்து தமிழ் இலக்கியத்துக்குப் பங்காற்றி வருகிறார். இவரது வலைப்பூ கீதமஞ்சரி. geethamanjari.blogspot. com


What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments